மது போதை தகராறில் ரவுடி சரமாரி வெட்டிக்கொலை

திருவொற்றியூர்: எண்ணூர் தாழங்குப்பம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ராஜசேகர் (29). இவருக்கு சந்தியா என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். ராஜசேகர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.  நகை பறிப்பு வழக்கு ஒன்றில் கைதான இவர், கடந்த வாரம் தான் சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்நிலையில், நேற்று மாலை ராஜசேகர் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து எண்ணூர் ரயில்வே மேம்பாலம் அருகே மது அருந்தியுள்ளார். மது போதையில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ராஜசேகரை, 4 பேரும் அரிவாளால் வெட்டி உள்ளனர்.

அவர்களிடம் இருந்து தப்பிக்க அருகே உள்ள கொசஸ்தலை ஆற்றில் குதித்து தப்பி ஓட முயன்றுள்ளார்.ஆனாலும் அவரை விரட்டி சென்ற அவர்கள் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர். இதில், ராஜசேகர் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்து வந்த எண்ணூர் போலீசார், ராஜசேகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து, தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: