தண்டையார்பேட்டை: கொடுங்கையூர் குப்பைமேடு பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியே வந்த ஒரு ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனர். அதில், குட்கா, ஹான்ஸ் மற்றும் போதை பாக்குகள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து, ஆட்டோ டிரைவரான வியாசர்பாடி கல்யாணபுரத்தை சேர்ந்த வினோத் குமாரை (36) பிடித்து விசாரித்தபோது, சவுகார்பேட்டை கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் அலுவலகம் நடத்தி வரும் அஞ்சுபாபு (36), பார்த்திபன் (40) ஆகியோர் பெங்களூருவில் இருந்து குட்கா, ஹான்ஸ், மாவா போன்ற போதை பொருட்களை கடத்தி வந்து, கொடுங்கையூர் விவேகானந்தா நகர் 2வது தெருவில் உள்ள குடோனில் பதுக்கி வைத்து, சென்னை முழுவதும் விற்பனை செய்தது தெரியவந்தது.