சர்வீஸ் சாலையோரம் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு

கரூர்: கரூர் திருக்காம்புலியூர் அருகேயுள்ள சர்வீஸ் சாலையில் குவிந்துள்ள குப்பைகள் உடனடியாக அகற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் திருக்காம்புலியூரில் சேலம் மதுரை கோவை போன்ற பகுதிகளுக்கான சாலை பிரிகிறது. இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டு  பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் மதுரைக்கு செல்லும் சாலையோரம் மேம்பாலத்தின்கீழ் சர்வீஸ் சாலை பயன்பாட்டில் உள்ளது.

கரூரில் இருந்து  மதுரை, திண்டுக்கல் மற்றும் மாவட்ட பகுதிகளுக்கு செல்லும் அனைத்து தரப்பினர்களும் இந்த சர்வீஸ் சாலையின் வழியாக செல்கின்றனர்.  இந்நிலையில் சர்வீஸ் சாலையோரம் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்பட்டுள்ள குப்பைகள் மலை போல் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. இதன்  காரணமாக துர்நாற்றம் ஏற்பட்டு கடந்து செல்லும் அனைவரும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் இதனை பார்வையிட்டு  உடனடியாக இந்த பகுதியில் இருந்து அகற்ற தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: