மதுரை: மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர், மறைந்த மனைவியின் நினைவாக வீட்டில் அவரது சிலை வைத்து வழிபட்டு வருகிறார். மதுரை, மேலப்பொன்னகரத்தைச் சேர்ந்தவர் சேதுராமன் (74). இவரது மனைவி பிச்சைமணி (68). மூன்று மகள்கள் உள்ளனர். ஆக.8ம் தேதி உடல்நலக்குறைவில் பிச்சைமணி இறந்தார். வாழ்வில் உற்ற துணையாக இருந்துவந்த மனைவி இறந்ததால் சேதுராமன் மனம் தவித்தார். மனைவி இல்லாத வீட்டில் வசிப்பதே அவருக்கு இயலாத காரியமாக இருந்தது.கர்நாடக மாநிலம் கொப்பால் கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சீனிவாஸ் குப்தா, தன் மனைவிக்கு சிலிக்கான் சிலை வடித்த தகவல் இணையத்தில் வைரலானதை பார்த்தார். உடனே, மதுரையை சேர்ந்த ஓவியர் மருது, சிற்பியான பிரசன்னா ஆகியோரை தொடர்பு கொண்டு தனது மனைவிக்கு சிலை வடிக்கவேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்து, 16 போட்டோக்களை கொடுத்துள்ளார். 22 நாட்கள் உழைப்பில் பைபர் மெட்டீரியலைக் கொண்டு பிச்சைமணி அமர்ந்திருப்பதைப்போல 6 அடி சிலை செய்து கொடுத்துள்ளனர்.