திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் நடைபெறக்கூடிய பிரம்மோற்சவத்தின் போது சுவாமி தரிசனம் செய்வதற்கான ரூ300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் வெளியீடு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் 19-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி 15 ம் தேதி கோவிலை சுத்தம் செய்யும் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இந்த நாட்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கான ரூபாய் 300 சிறப்பு தரிசன டிக்கட் இதுவரை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த டிக்கெட்டுகளை இன்று மாலை 4 மணிக்கு பக்தர்கள் தேவஸ்தான இணையதள முகவரியான https://tirupatibalaji.ap.gov.in/#/login செய்து டிக்கெட் முன்பதிவு செய்யும் விதமாக டிக்கெட் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக இந்த ஆண்டு பிரம்மோற்சவம் நடைபெற கூடிய நாட்களில் சுவாமி வீதிஉலா நடைபெறுவது வரலாற்றில் முதல் முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கோவிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் பிரம்மோற்சவத்தின் போது சுவாமி தாயார் எந்தெந்த வாகனங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்களோ அந்த வாகனங்களில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட உள்ளனர். இந்நிலையில் பிரம்மோற்சவம் நடைபெற கூடிய நாட்களில்  ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதனிடையே திருப்பதி ஏழுமலையான் கோவிலில்  இன்று 12,638 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். உண்டியலில் காணிக்கையாக ஒரே நாளில் 1.16 கோடி ரூபாய் காணிக்கை பக்தர்கள் செலுத்தினர். 4 ஆயிரத்து 029 பக்தர்கள் மொட்டை அடித்து தலை முடி காணிக்கை செலுத்தியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories: