தமிழகத்தில் காலியாக உள்ள திருவொற்றியூர் உள்பட 3 தொகுதிக்கு இடைத்தேர்தல்: நவம்பரில் பீகார் தேர்தலுடன் அறிவிக்கப்படுமா?

சென்னை: நவம்பர் மாதம் பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறும்போது, தமிழகத்தில் காலியாக உள்ள திருவொற்றியூர், குடியாத்தம், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் அறிவிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பீகார் சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் மாதம் முடிகிறது. எனவே பீகார் மாநிலத்துக்கு நவம்பர் 29ம் தேதிக்கு முன்பு சட்டசபை ேதர்தல் நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தேர்தலுடன், நாடு முழுவதும் நிலுவையில் உள்ள 64 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் திருவொற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி கடந்த பிப்ரவரி 27ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அதுபோல, குடியாத்தம் தொகுதி திமுக எம்எல்ஏ காத்தவராயன் உடல்நலம் பாதிக்கப்பட்டு  கடந்த பிப்ரவரி 28ம் தேதி காலமானார். திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கடந்த ஜூன் 10ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார். இதையடுத்து தமிழகத்தில் 3 சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக உள்ளன. கடந்த 28ம் தேதி எச்.வசந்த்குமார் எம்பி உயிரிழந்ததை அடுத்து கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

தேர்தல் விதிகளின்படி தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி, திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய 2 தொகுதியில் கடந்த ஆகஸ்டு மாதத்திற்குள் தேர்தல் நடத்தி முடித்திருக்க வேண்டும். கொரோனா காரணமாக தேர்தல் நடத்தப்படவில்லை. சட்டமன்ற ஆயுள்காலம் ஒரு வருடத்திற்கு குறைவாக இருந்தால் இடைத்தேர்தலை நடத்த வேண்டியதில்லை என்றும் விதி உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக சட்டசபைக்கு, அடுத்த ஆண்டு மே மாதத்தில் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கு இன்னும் 7 மாதங்களே உள்ளன. பதவிக்காலம் ஓராண்டுக்கும் குறைவாக இருந்தால், தேர்தல் நடத்தாமலும் இருக்கலாம்.

அதேநேரம் கன்னியாகுமரி எம்பி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த எந்த தடையும் இல்லை. எனவே, தமிழக சட்டப்பேரவைக்கு, இடைத்தேர்தல் நடப்பதற்கான வாய்ப்பு குறைவு என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறுகையில், ``தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்துவதா அல்லது வேண்டாமா? என்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையம்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும். தமிழக தேர்தல் அலுவலகத்தை பொறுத்தவரை எப்போது இடைத்தேர்தல் அறிவித்தாலும் நடத்த தயாராக இருக்கிறோம்’’ என்றார்.

Related Stories: