அர்ஜுனா விருது, கேல் ரத்னா விருதுக்கான பரிசுத்தொகை அதிகரிப்பு: மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல்

புதுடெல்லி: அர்ஜுனா விருது, கேல் ரத்னா விருதுக்கான பரிசுத்தொகையை மத்திய அரசு அதிகரித்துள்ளது. விளையாட்டுத் துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது போன்றவை விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் பல்வேறு துறை சார்ந்த வீரர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரோகித் சர்மா, டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிக்கா பத்ரா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் உள்ளிட்டோர் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மேஜர் தயான் சந்தின் பிறந்தநாளையொட்டி டெல்லி மேஜர் தயான் சந்த் தேசிய விளையாட்டரங்கில் உள்ள அவரது சிலைக்கு மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண்  ரிஜிஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், விளையாட்டு மற்றும் சாகச விருதுகளுக்கான பரிசுத் தொகையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அர்ஜுனா விருதுக்கான பரிசுத் தொகை ரூ .15 லட்சமாகவும், கேல் ரத்னா விருதுக்கான பரிசுத்தொகை ரூ.25 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது என விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தேசிய விளையாட்டு தினத்தையொட்டி தேசிய விளையாட்டு மற்றும் சாகசங்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று காணொலி வாயிலாக நடைபெற உள்ளது. விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்க உள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: