கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

சென்னை: தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழகத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், வேலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியசும் நிலவக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியசும் நிலவக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டையில் 10 செ.மீ மழையும், நத்தம் தானியங்கி மழைமானியில் 9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. அதேபோல், நத்தம், வைகை அணை பகுதிகளில் தலா 7 செ.மீ மழையும், திண்டுக்கல் நிலக்கோட்டை, மைலம்பட்டி பகுதிகளில் தலா 6 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. மேலும், அம்பாசமுத்திரத்தில் 5 செ.மீ, ஆண்டிப்பட்டி, திருப்பத்தூர், தரமணி, செஞ்சி, நாமக்கல், அறந்தாங்கி, கள்ளிக்குடி, மலையூர், கலசப்பாக்கம், முண்டிம்பாக்கம் பகுதிகளில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

ஆகஸ்டு 27(இன்று) மற்றும் 28ம் தேதிகளில், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்லவேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: