சென்னை அயனாவரத்தில் ரவுடி சங்கர் என்கவுண்டர் செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரிக்க சென்னை காவல்துறை பரிந்துரை!!

பெரம்பூர்: சென்னை அயனாவரத்தில் ரவுடி சங்கர் என்கவுண்டர் செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரிக்க சென்னை காவல்துறை பரிந்துரை செய்துள்ளது. அயனாவரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சங்கர் (எ) இளநீர் சங்கர் (48) என்பவரை, அயனாவரம் போலீசார் கடந்த 21ம் தேதி அதிகாலை என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், சங்கரின் தாயார் கோவிந்தம்மாள் மற்றும் சகோதரி ரேணுகா ஆகியோர், சங்கரின் மரணத்தில் மர்மம் உள்ளதாகவும், அவரை சுட்டுக்கொன்ற இன்ஸ்பெக்டர் நடராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர். மேலும் இது தொடர்பாக எழும்பூர் பெருநகர குற்றவியல் 5வது நீதிமன்ற நீதிபதி சிவசக்திவேல் கண்ணனிடம் புகார் அளித்தனர்.

இந்நிலையில், பிரேத பரிசோதனை முடிந்ததும் ரவுடி சங்கரின் உடலை அவரது உறவினர்களிடம் போலீசார் . ஒப்படைத்தனர். இதனிடையே சங்கர் வெட்டியதால் படுகாயமடைந்த காவலர் முபாரக்கிற்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரவுடி சங்கர் மீது 3 கொலை வழக்கு, 4 கொலை முயற்சி வழக்கு உட்பட 50 வழக்குகள் உள்ளன. 5 முறை வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 9 முறை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கஞ்சா வழக்கில் பிடிபட்ட போது தான் என்கவுண்டர் நடந்துள்ளது.

இந்நிலையில் ரவுடி சங்கர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மனித உரிமை தொடர்பான விவகாரம் என்பதால் சிபிசிஐடி விசாரிக்க சென்னை காவல்துறை பரிந்துரைத்துள்ளது.வழக்கு நிலுவையில் உள்ள காவல் நிலையத்தில் போலீசே என்கவுண்டர் செய்தால் சிபிசிஐடி விசாரிப்பது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: