ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்க தனி விமானம் மூலம் துபாய்க்கு புறப்பட்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி..!!

சென்னை: ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தனி விமானம் மூலம் துபாய்க்கு புறப்பட்டனர். கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐ.பி.எல் தொடர் தள்ளிவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19ம் தேதி ஐ.பி.எல் போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 19ம் தேதி தொடங்கும் இந்த தொடர், நவம்பர் 10ம் தேதி முடிவடைகிறது. துபாய், அபுதாபி, ஷார்ஜாவில் உள்ள மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.

இதற்காக அணி வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் ஐ.பி.எல் தொடரில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று மதியம் துபாய்க்கு புறப்பட்டு சென்றது. இதில் பங்கேற்கவுள்ள தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர், கடந்த 15ம் தேதி முதல் சென்னையில் பயிற்சி மேற்கொண்டனர். தற்போது 2 கட்ட கொரோனா பரிசோதனைக்கு பிறகு, அணிவீரர்கள் மற்றும் நிர்வாகிகள் உட்பட 51 பேர் தனி விமானம் மூலம் துபாய்க்கு புறப்பட்டுள்ளனர்.

தோனி, ரெய்னா, ஜடேஜா உள்ளிட்ட சி.எஸ்.கே. அணி வீரர்கள், மஞ்சள் நிற டி - ஷர்ட் அணிந்து சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளம்பினர். துபாயை சென்றடைந்த பிறகு, மீண்டும் சி.எஸ்.கே. அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. ஹர்பஜன்சிங்கின் தாயாருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் தற்போது அணியினருடன் அவர் துபாய் புறப்படவில்லை.

Related Stories: