எம்.எஸ். தோனிக்கு பிரியாவிடை அளிக்க ராஞ்சியில் கிரிக்கெட் போட்டி நடத்த வேண்டும்!: பி.சி.சி.ஐ.க்கு ஜார்கண்ட் முதல்வர் கோரிக்கை..!!

ராஞ்சி: எம்.எஸ். தோனிக்கு பிரியாவிடை அளிக்க அவரது சொந்த ஊரில் ஒரு கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டும் என்று ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வை அறிவித்தது குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது பல தரப்பினரும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். எம்.எஸ். தோனி இந்திய தேசத்திற்கும், அவர் பிறந்த ஜார்கண்ட் மாநிலத்திற்கும் எண்ணிலடங்கா புகழை தேடி தந்ததாக அம்மாநில முதலமைச்சர்  ஹேமந்த் சோரன் கூறியுள்ளார்.

கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகளை படைத்த தோனியை கவுரவிக்க அவர் பிறந்த ராஞ்சியில் ஒரு கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு  ஹேமந்த் சோரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனிடையே தோனியின் சாதனைகளை புகழ்ந்து இந்திய கிரிக்கெட் வாரியம் செய்தி வெளியிட்டுள்ளது. தோனி கடைசியாக 2019ல் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடினார். ஓராண்டாக ஒருநாள் போட்டியில் விளையாடாமல் இருந்த தோனி தமது ஓய்வு முடிவை தற்போது அறிவித்துள்ளார்.

தோனியை கவுரவிக்க தனியாக ஒரு போட்டியை நடத்த வேண்டும் என்று கிரிக்கெட் ரசிகர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனால் இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் இதுவரை எந்த தகவலும் வெளியிடவில்லை. இந்நிலையிலேயே எம்.எஸ். தோனிக்கு பிரியாவிடை அளிக்க ராஞ்சியில் கிரிக்கெட் போட்டி நடத்த வேண்டும் என ஜார்கண்ட் மாநில முதல்வர் பி.சி.சி.ஐ.க்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: