சென்னையில் டாஸ்மாக் மூடப்பட்டுள்ள நிலையில் டீ, காபி போல கூவிகூவி மதுபானம் விற்றவர் கைது: கூட்டுறவு வங்கி தலைமை ஆபிஸ் வளாகத்தில் நடந்த கொடுமை

சென்னை: தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைமை அலுவலக வளாகத்தில் கூவி கூவி மது விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். சென்னை அபிராமபுரத்தில் தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. தலைமை வங்கி என்பதால் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஒரு நபர், வங்கிக்கு வந்து செல்லும் வாடிக்கையாளர்களிடம் மது வேண்டுமா என்று கூவி கூவி மது பாட்டில்களை விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்து அபிராமபுரம் போலீசாருக்கு மக்கள் தகவல் அளித்தனர். அதன்படி நேற்று போலீசார் சாதாரண உடையில் கூட்டுறவு வங்கி வளாகத்தில் கண்காணித்தனர்.

அப்போது, வாடிக்கையாளர் ஒருவருக்கு மது விற்பனை செய்யும் போது, அங்கு மறைந்து இருந்த போலீசார் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை செய்த நபரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியதில், தி.நகரை சேர்ந்த சரவணன் (37). சென்னையில் மது விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. எனவே கொரோனா ஊரடங்கின் போது வெளி மாவட்டங்களில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்றதும், கடந்த 2 மாதங்களாக அபிராமபுரம் டிமாண்டி காலனி, செயின்ட் மேரிஸ் சாலையில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் சரவணனை கைது செய்தனர். அவரிடம் இருந்து விலை உயர்ந்த 51 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories: