13 வயது சிறுவனுக்கு 2 ஆண்டாக 31 வயது பெண் செக்ஸ் டார்ச்சர்: போக்சோவில் கைது

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே 13 வயது சிறுவனுக்கு 2 ஆண்டாக பாலியல் தொந்தரவு கொடுத்த 31 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே ஆவினிப்பட்டியை சேர்ந்தவர் வினிதா (31, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது கணவர் இறந்துவிட்டார். இவர் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிறுவனின் தந்தை கீழச்சிவல்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார், சிறுவனை அழைத்து விசாரித்தனர். விசாரணையில், கடந்த இரண்டு வருடத்திற்கு முன் இந்த சிறுவன் தனது வீட்டின் அருகே உள்ள மாமரத்தில் கல் எறிந்தான். அது அருகில் உள்ள வினிதாவின் தங்கையின் வீட்டின் மீது விழுந்தது. அப்போது தங்கையின் வீட்டிற்கு வந்திருந்த வினிதா வெளியில் வந்து பார்த்தபோது இந்த சிறுவன் நின்றான்.

அவனை பிடித்த வினிதா, ‘நீ எறிந்த கல் கண்ணாடி மீது பட்டு உடைந்துவிட்டது. அதனால் ரூ.2 ஆயிரம் தர வேண்டும் என்று மிரட்டியுள்ளார். பயந்துபோன சிறுவன் வீட்டில் இருந்த பணத்தை யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்து கொடுத்தான். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட வினிதா, அடிக்கடி சிறுவனிடம் பணம் பறித்துள்ளார். மேலும், சிறுவனை மிரட்டி பாலியல் ரீதியாகவும் பயன்படுத்தி வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் உள்ள பணம் திடீர் திடீரென மாயமாவது குறித்து சிறுவனின் பெற்றோர் மிரட்டி கேட்டுள்ளனர். அப்போது நடந்த உண்மைகளை எல்லாம்  சிறுவன் கூறியுள்ளது தெரிந்தது. சிறுவனின் தந்தையின் புகாரின் அடிப்படையில் கீழச்சிவல்பட்டி போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து, வினிதாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நிலக்கோட்டை பெண்கள் சிறையில் அவரை அடைத்தனர்.

Related Stories: