மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரம்: மேற்குவங்க நெடுஞ்சாலையில் மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் வன்முறை!

சோப்ரா: பள்ளி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தை கண்டித்து உள்ளூர் மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டதால் மேற்குவங்க தேசிய நெடுஞ்சாலை வன்முறை களமாக மாறியது. மேற்குவங்கம் மாநிலம் சோனாப்பூர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிலிகுரி அருகே இருக்கும் இந்த கிராமத்தில் கழிப்பறைக்கு சென்ற 10ம் வகுப்பு பள்ளி சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். மரத்திற்கு அடியில் இந்த சிறுமியின் உடல் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த இடத்தில் கண்டிபிடிக்கப்பட்ட செருப்பு உள்ளிட்ட ஆதாரங்களை போலீசார் எடுத்து சென்று விசாரித்து வருகிறார்கள். போலீசார் இதில் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த வன்புணர்வு கொலை வழக்கில் போலீசார் சரியாக செயல்படவில்லை என்று கூறி அங்கு கடுமையான கலவரம் நடத்தப்பட்டது. கொல்கத்தாவில் இருந்து சிலிகுரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், சோப்ரா என்ற இடத்தில் திரண்ட மக்கள், சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 3 பேருந்துகளும், போலீஸ் வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. 3 மணி நேரத்திற்கும் பிறகு போராட்டத்தை போலீசார் அடக்கினாலும், அருகில் உள்ள மற்றோர் சாலையில் திரண்ட மக்கள் போலீசார் மீது அம்புகளை விட்டு தாக்குதல் நடத்தினர். இதனால் அந்த பகுதி முழுதும் போர்க்களம் போல காட்சி அளித்தது. இதனிடையே உடல் கூறாய்வு அறிக்கையில், விஷம் உடலுக்குள் சென்றதால் உயிரிழப்பு எனவும், மாணவியின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: