மே.வங்கத்தில் பாஜக எம்.எல்.ஏ. மர்ம மரணத்தால் சர்ச்சை: குடியரசுத் தலைவரை சந்தித்து பாஜக நிர்வாகிகள் முறையீடு!!!

மேற்குவங்கம்:  மேற்குவங்கத்தில் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. மரணம் திட்டமிட்ட படுகொலை என்று குற்றம் சாட்டியுள்ள அக்கட்சி நிர்வாகிகள் மம்தா பானர்ஜி அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். மேற்குவங்க பாஜக எம்.எல்.ஏ திபேந்திரநாத் ராயின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. அதாவது கொல்கத்தாவிலிருந்து 454 கி.மீ தொலைவில் தினாஜ்பூரில் உள்ள மார்க்கெட் பகுதியிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் திபேந்திரநாத் உடலானது கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த பகுதியானது இவரது வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் மற்றும் பாஜக மூத்த நிர்வாகிகள் உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து முறையிட்ட பாரதிய ஜனதா கட்சி மூத்த நிர்வாகிகள் மேற்கு வங்கத்தில் கடந்த 3 ஆண்டுகளில் அரசியல் காரணங்களுக்காக நடத்தப்பட்ட கொலைகளை பட்டியலிட்டனர். இதனைத்தொடர்ந்து, மம்தா பானர்ஜி அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

மேலும், ஹேமலதாபாத் தனி தொகுதி எம்.எல்.ஏ. திபேந்திரநாத் ராய் மரணத்தை கண்டித்து மேற்கு வங்கத்தின் வடக்கு மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டத்திற்கு பாஜக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதனைத்தொடர்ந்து சிலிகுரி மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சி நிர்வாகிகளை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தியதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மரணமடைந்த திபேந்திரநாத் உடலுக்கு பாரதிய ஜனதா கட்சி மூத்த நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். மேலும், திபேந்திரநாத் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் தூக்கில் தொங்கியதற்கான அடையாளம் உறுதி செய்யப்பட்டது.

Related Stories: