தூத்துக்குடி: சாத்தான் குளம் இரட்டைக்கொலை வழக்கில் கைதான ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 5 பேரின் ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சாத்தான் குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த மாதம் ஒன்றாம் தேதி ஊரடங்கை மீறி செயல்பட்டதாக கூறி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர், தந்தை-மகன் இருவரும் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கொலை குறித்து தீவிர விசாரணை வேண்டும் என பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
மேலும், இந்த போராட்டமானது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், சிபிஐ விசாரணையின் போது முதற்கட்டமாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், சாத்தான் குளம் தந்தை-மகன் சித்திரவதை மரணம் தொடர்பாக 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சஸ்பெண்டும் செய்யப்பட்டனர். இதனால் இதுவரை சாத்தான் குளம் கொலை வழக்கில் 10 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், முதலில் கைது செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 5 பேரின் மனு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், சி.பி.சி.ஐ.டி தரப்பில் யாரும் ஆஜராகாததால் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 5 பேரின் மனுவை மாலை 5 மணிக்கு ஒத்திவைத்தனர்.