புதுடெல்லி: கொரோனா பாதிப்பால் நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் கடுமையான வீழ்ச்சியடைந்துள்ளன. ஆனால், ஆன்லைன் கல்வி, பில் கட்டண சேவைக்கு மவுசு அதிகரித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள் மார்ச் தொடங்கியே மூடப்பட்டுள்ளது. எனினும் பிரபல நிறுவனங்கள் ஆன்லைன் மூலமான வகுப்புக்களை தொடங்கி நடத்தி வருகின்றன. இதன் காரணமாக ஆன்லைன் கல்வி சேவையானது 23 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. அதேபோல் பொது போக்குவரத்து முடக்கம், கட்டுப்பாடுகள், வெளியே சென்றால் நோய் பரவும் அச்சம் காரணமாக பல துறைகளில் ஆன்லைன் மூலமாக கட்டணங்கள் செலுத்துதல் அதிகரித்துள்ளது. பொதுமக்கள் செல்போன், மின்கட்டணம், அத்தியாவசிய பொருட்களுக்கான ஆர்டர்களை ஆன்லைனில் வழங்குதல் என வெளியே செல்லாமல் அனைத்தையும் வீட்டுக்குள் இருந்தே செல்போன் மூலமாக செய்துவிடுகின்றனர். இந்த ஆன்லைன் பில் கட்டண சேவை 163 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனாலும், பொருளாதார வீழ்ச்சி காரணமாக ஓட்டுமொத்த டிஜிட்டல் பரிவர்த்தனை கணிசமாக குறைந்துள்ளது.