டெல்லியில் இருந்து தனி விமானத்தில் மத்திய மின்சார அமைச்சர் இன்று சென்னை வருகை: தலைமை செயலகத்தில் முதல்வரை சந்திக்க திட்டம்

சென்னை: மத்திய மின்சார துறை அமைச்சர் ஆர்.கே.சிங் இன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வருகிறார். தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடியுடன் இன்று மதியம் சந்தித்து பேசிவிட்டு மாலையே டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். மத்திய மின்சாரத்துறை அமைச்சா் ஆர்.கே.சிங் இன்று காலை 8 மணிக்கு தனி விமானத்தில் டெல்லியில் இருந்து புறப்பட்டு காலை 11 மணிக்கு சென்னை, உள்நாட்டு விமான நிலையம் வருகிறார். பின்னர் அங்கிருந்து நேராக சென்னை தலைமை செயலகம் சென்று மதியம் 12 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பு சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. பின்பு இன்று மாலை 4.30 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானத்தில் மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் டெல்லி புறப்பட்டு செல்வார் என்று கூறப்படுகிறது.

இந்த சந்திப்பின்போது மின்சார துறை அமைச்சர் தங்கமணி உள்ளிட்ட சில மூத்த அமைச்சர்கள், செயலாளர்களும் கலந்து கொள்கிறார்கள். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக  ஈடுபட்டுள்ளன. இந்தநிலையில் மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தனி விமானம் மூலம் சென்னை வந்து முதல்வரை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நடைபெறும் மின் திட்டங்கள் குறித்தும், மத்திய அரசு தமிழகத்துக்கு தர வேண்டிய சலுகைகள் குறித்தும் இந்த சந்திப்பின்போது பேசப்படும் என்றும் கூறப்படுகிறது.

Related Stories: