மேட்டூர்: சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பெரியதண்டா கிராமம் உள்ளது. தமிழக-கர்நாடக வனப்பகுதிகள் சந்திக்கும் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி இந்த கிராமம் உள்ளது. இங்குள்ள பச்சைப்பாலி ஓடை என்ற இடத்தில், கடந்த 3 நாட்களாக 6 வயது மதிக்கதக்க ஆண் யானை உடல் மெலிந்து நடக்க முடியாமல் விழுந்து கிடந்தது. இதை பார்த்த கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் அங்கு வந்த மேட்டூர் வனச்சரகர் பிரகாஷ் மற்றும் வனத்துறையினர், யானையை பார்வையிட்டனர். கால்நடை மருத்துவர் பிரகாஷ் பரிசோதித்தபோது, அந்த யானை குடல்புண் நோயால், உணவு உண்ண முடியாமல் அவதிப்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, யானைக்கு ஊசி மூலம் உணவும், மருந்தும் செலுத்தப்பட்டு வருகிறது. நேற்று யானையின் உடலில் 100 லிட்டர் தண்ணீர் மற்றும் 50 பாட்டில் குளுக்கோஸ் செலுத்தப்பட்டது.