புதுடெல்லி: கொரோனாவில் இருந்து முதியவர்களை பாதுகாக்கும் பொருட்டு, மக்களவை, சட்டப்பேரவை தேர்தலில் தபால் ஓட்டு போடுபவர்களுக்கான வயது வரம்பு 80ல் இருந்து 65 ஆக தேர்தல் ஆணையம் குறைத்துள்ளது. மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்களில் பாதுகாப்பு படை வீரர்கள், தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்கள் மட்டுமே தபால் ஓட்டு போட அனுமதிக்கப்பட்டு வந்தனர். பின்னர், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும், மாற்றுத் திறனாளிகளும் தபால் ஓட்டு போட அனுமதிக்கும் வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தேர்தல் விதிகளை சட்ட அமைச்சகம் திருத்தியது.
இந்நிலையில், கொரோனா பரவலைத் தொடர்ந்து முதியவர்களின் பாதுகாப்பு கருதி, தபால் ஓட்டு போடுவதற்கான வயது வரம்பு 80ல் இருந்து 65 ஆக குறைக்கலாம் என மத்திய சட்ட அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தது. அதை ஏற்ற சட்ட அமைச்சகம் கடந்த 19ம் தேதி தேர்தல் விதியில் மாற்றம் செய்திருப்பதாக தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.