காரியாபட்டி: காரியாபட்டியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து நிச்சயதார்த்தம் நடந்து கொண்டிருந்தபோதே, அதில் பங்கேற்ற 50க்கும் மேற்பட்டோரை பரிசோதனைக்கு அழைத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் தாலுகா அலுவலகம் முன்பு விதை உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்தில் காரியாபட்டி, பாண்டியன் நகரைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். இதே அலுவலகத்தில் பணியாற்றி வரும் கோவில்பட்டியை சேர்ந்தவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த அலுவலகத்தில் பணிபுரிந்த பெண் மற்றும் நிறுவனர் மற்றும் பணியாளர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.