ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட கல்வி அலுவலகம் முன் பணியும், நிவாரணமும் கேட்டு நேற்று இரவு காவலர் குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டார். திமிரி வரதா ரெட்டி தெருவை சேர்ந்தவர் வெற்றிவேலன்(43), இவர் கடந்த 2003ம் ஆண்டில் திமிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் இரவு காவலராக மாத தொகுப்பு ஊதியம் 500க்கு பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், கடந்த 2012ம் ஆண்டு முதல் இவருக்கு வருகை பதிவேடு, ஊதியம் வழங்கப்படவில்லையாம். மேலும், இவருக்கு பதிலாக வேறு ஒருவரை இரவு காவலராக கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆயிரத்து 500 சம்பளத்தில் நியமிக்கப்பட்டார். இதனால் குடும்பத்துடன் வறுமையில் கடந்த 8 ஆண்டுகளாக வெற்றிவேலன் சிக்கி தவித்து வருகிறாராம். இதுகுறித்து, திமிரி பள்ளி தலைமை ஆசிரியர், கலெக்டர், மாவட்ட கல்வி அலுவலருக்கும் மனு அளித்துள்ளார். ஆனால் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.