ஓசூர்: ஓசூரில் உயிருடன் மீனை விழுங்கிய வாலிபர் மூச்சுத்திணறி இறந்தார். அவர் டிக்-டாக் எடுத்த போது இந்த விபரீதம் நேர்ந்ததா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பார்வதி நகரை சேர்ந்தவர் வெற்றிவேல் (22). கட்டிட மேஸ்திரியான இவருக்கு திருமணமாகி, 2 வயதில் மகன் உள்ளான். நேற்று முன்தினம், வெற்றிவேல் தனது நண்பர்களுடன் அதே பகுதியில் உள்ள ஏரிக்கு மீன் பிடிக்க சென்றார். மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது, உயிருள்ள மீனை அவர் விழுங்கியதாக கூறப்படுகிறது. அப்போது, மீன் எதிர்பாராத விதமாக அவரது சுவாசக்குழாயில் சிக்கிக் கொண்டதால், மூச்சுவிட முடியாமல் திணறினார். பயந்து போன அவரது நண்பர்கள், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.