வாணியம்பாடியில் கேன்டீன் ஊழியரை தாக்கிய போதை கும்பல்: ஆத்திரமடைந்த தியேட்டர் ஊழியர்கள் ஒன்று சேர்ந்து இளைஞர்களை தாக்கிய காட்சி வெளியீடு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள திரையரங்கில் இரவு காட்சியின் போது கேன்டீன் ஊழியரை போதை கும்பல் ஒன்று தாக்கிய நிலையில் அந்த கும்பலை தியேட்டர் ஊழியர்கள் தாக்கிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலையில் தனியாருக்கு சொந்தமாக 3 திரையரங்குகள் ஒரே வளாகத்தில் இயங்கிவருகிறது.

அந்த திரையரக்கில் நேற்று முன்தினம் இரவு காட்சியின் போது திரைப்பட இடைவெளியில் படம் பார்க்க வந்த இளைஞர்கள் சிலர் திரையரங்கு உள்ளே இயங்கிவரும் கேன்டீனில் சிப்ஸ் வாங்கியுள்ளனர். அப்போது அந்த சிப்ஸ் ஏன் தூளாக உள்ளது என கூறி தியேட்டர் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு ஊழியர்கள் வேறு சிப்ஸ் வாங்கி கொடுத்து விடுகிறோம் என்று இளைஞர்களிடம் கூறியுள்ளனர். அந்த இளைஞர்கள் மது போதையில் இருந்ததாகவும் அப்போது அந்த இளைஞர்கள் சிலர் கேன்டீனில் இருந்த ஊழியர்கள் சிலரை தாக்கியுள்ளனர்.

இதனை கண்டு ஆத்திரமடைந்த கேன்டீன் ஊழியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இளைஞர்களை அடித்து வெளியே இறக்கியுள்ளனர். இதனால் பொழுது போக்கிற்காக படத்தை பார்க்க வந்த பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டது. பின்னர் தகவலறிந்து வந்த தியேட்டரின் மேலாளரிடம் போதையில் இருந்த மற்ற இளைஞர்கள் தங்கள் செய்தது தவறு என்று தங்களுடைய தவறை உணர்ந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த மோதல் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

The post வாணியம்பாடியில் கேன்டீன் ஊழியரை தாக்கிய போதை கும்பல்: ஆத்திரமடைந்த தியேட்டர் ஊழியர்கள் ஒன்று சேர்ந்து இளைஞர்களை தாக்கிய காட்சி வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: