செல்லப்பிராணி வாங்க சென்றபோது சிறுமிக்கு பாலியல் தொல்லை கடை உரிமையாளர் கைது

சென்னை: மயிலாப்பூர் நொச்சி நகரை சேர்ந்தவர் ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தார். அதில், வீட்டில் வளர்க்க செல்லப்பிராணி வாங்க திருவல்லிக்கேணி லாயிட்ஸ் சாலையில் உள்ள செல்லப்பிராணி கடைக்கு 16 வயதுள்ள எனது மகள் கடந்த 13ம் தேதி சென்றாள். அப்போது, கடையின் உரிமையாளர் மணிகண்டன் (30), ஆசைவார்த்தை கூறி எனது மகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி கடந்த 30ம் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது மணிகண்டன் வீட்டிற்கு வந்து எனது மகளிடம் தவறாக நடந்து கொண்டார். இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். எனவே எனது மகளை மிரட்டி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதன்பேரில், மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது செல்லப்பிராணி கடை நடத்தி வரும் மணிகண்டன் ஆசைவார்த்தை கூறி, மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது. அதைதொடர்ந்து போலீசார் மணிகண்டன் மீது போக்சோ மற்றும் மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், பாலியல் தொந்தரவுக்கு ஆளான சிறுமிக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

முதியவர் உள்பட 2 பேர் போக்சோவில் கைது

திருவான்மியூர் அடுத்த வெட்டுவாங்கேணி  கஸ்தூரிபா நகரை சேர்ந்த பட்டாணி முத்து (75) என்பவர், அதே பகுதியில்  மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் இவரது கடைக்கு பொருட்கள் வாங்க வந்த அதே பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், போலீசார் நேற்று இவரை போக்சோ சட்டத்தில்  கைது செய்து சிறையில் அடைத்தனர். ஸ்ரீவில்லிவாக்கத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்து, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்ற பெரும்பாக்கத்தை சேர்ந்த பாலாஜி (18) என்பவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: