அயோத்தியில் ராமர் கோயில் நாளை கட்டுமான பணி துவக்கம்: அறக்கட்டளை அமைப்பின் தலைவர் தகவல்

அயோத்தி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் நாளை தொடங்க உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ஏற்கனவே ராமர் கோயில் இருந்ததாக கூறி பாபர் மசூதி கடந்த 1992ல் கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடந்த வழக்கில், ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு நவம்பரில் இறுதி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, அங்கு ராமர் கோயில் கட்டுவதற்காக ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து கோயில் கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்காக அங்கிருந்த ராம் லாலா சிலை கடந்த மார்ச் மாதம் வேறொரு இடத்துக்கு மாற்றப்பட்டது.

கடந்த மாதம் 11ம் தேதி நிலத்தை சீரமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்றது. இந்நிலையில், ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் மகான் நிருத்ய கோபால் தாஸ் கூறுகையில், ``நாளை ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் சிறப்பு வழிபாடுகளுடன் தொடங்கப்பட உள்ளது. அதன் பிறகு ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்படும் என்றார்.

Related Stories: