மணல் திருட்டில் ஈடுபட்ட லாரியை விடுவிக்க கோரி கனிம வளத்துறை அதிகாரிக்கு மிரட்டல்: அதிமுக பிரமுகருக்கு வலை

ஆவடி: ஆவடி அருகே சேக்காடு ஏரியில் மணல் திருடிய லாரியை விடுவிக்கக்கோரி கனிம வளத்துறை அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டிய அதிமுக செயலாளர், அவரது மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஆவடி அடுத்த சேக்காடு ஏரியில் மணல் திருட்டு நடைபெறுவதாக திருவள்ளூர் மாவட்ட கனிமவளத் துறை அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் பொதுமக்கள் சார்பில் புகார்கள் சென்றன. இதனையடுத்து வருவாய் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது ஏரியில் மணல் திருடிய கொண்டிருந்த லாரியை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர்.

பின்னர், அந்த லாரியை ஆவடி காவல் நிலையத்தில் அதிகாரிகள் ஒப்படைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு ஆவடி மாநகர அதிமுக செயலாளர் ஆர்.சி.தீனதயாளன், அவரது மகன் ஹேமந்த் ஆகியோர் காரில் வந்தனர். பின்னர், அவர்கள் இருவரும் அதிகாரி பாஸ்கரனிடம் லாரியை விடுக்கமாறு மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. மேலும், அவர்கள் இருவரும் சேர்ந்து அவரை பணி செய்ய விடாமல் தடுத்து அவதூறாக பேசியதாகவும் தெரிகிறது. இதுகுறித்து, கனிம வளத்துறை வருவாய் ஆய்வாளர் பாஸ்கரன் ஆவடி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமையில் போலீசார் அவர்கள் இருவர் மீதும்  3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும்  தேடி வருகின்றனர். மணல் திருடிய லாரியை விடுவிக்க கோரி அதிகாரியை அதிமுக செயலாளர் மிரட்டிய சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: