திருமலை: கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக இஸ்ரோவில் இருந்து ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் பிஎஸ்எல்வி உட்பட 50 ராக்கெட்கள் விண்ணில் செலுத்த தயாராகி வருகிறது. இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன் மூத்த விஞ்ஞானிகளுடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் வருங்காலத்தில் விண்ணில் செலுத்தப்பட உள்ள செயற்கைக்கோள்கள், ஆராய்ச்சிகள் குறித்தும் ஆலோசனை நடந்தது. பிஎஸ்எல்வி ராக்கெட் ஜூலை இறுதி வாரத்தில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் விண்ணில் செலுத்தும் விதமாக திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கேரளா, திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தை சேர்ந்த பல விஞ்ஞானிகள் 8ம் தேதி இஸ்ரோ வர உள்ளனர். விஞ்ஞானிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.