பெரம்பூர்: கொரோனா கணக்கெடுப்பதாக கூறி வீடு புகுந்து நகை பறித்தவர் கைது செய்யப்பட்டார். சென்னை எம்கேபி நகர், 17வது மேற்கு குறுக்கு தெருவை சேர்ந்தவர் லெனின். இவரது மனைவி செல்வி (48). இவர், கடந்த 20ம் வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த 2 பேர், ‘‘நாங்கள் மாநகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள். கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த வந்துள்ளோம். உங்கள் வீட்டில் யாருக்காவது காய்ச்சல் உள்ளதா,’’ என கேட்டுள்ளனர்.அதற்கு செல்வி, ‘‘எங்கள் வீட்டில் யாருக்கும் காய்ச்சல் இல்லை,’’ என்றார். அப்போது, அந்த 2 பேர், செல்வியிடம் பேச்சு கொடுத்தபடி வீட்டிற்குள் சென்று, திடீரென கதவை உள்பக்கமாக தாழிட்டு, கத்தி முனையில் மிரட்டி, செல்வி அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றனர். சுதாரித்துக்கொண்ட செல்வி, அவர்களை கீழே தள்ளிவிட்டு, அலறி கூச்சலிட்டபடி வெளியே ஓடி வந்துள்ளார். அப்போது, வெளியே நின்றுகொண்டு இருந்த மேலும் 2 பேர், வீட்டிற்குள் சென்று செல்வியின் மகள் பிரதீஷா (30) என்பவரை கத்தியை முனையில் மிரட்டி அவர் அணிந்திருந்த 4 சவரன் தாலி சரடு மற்றும் ஒரு மோதிரம், வீட்டிலிருந்த 5 செல்போன்கள், ₹8 ஆயிரம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு வெளியே வந்தனர்
இதனிடையே, செல்வியின் அலறல் சத்தம்கேட்டு பக்கத்து வீட்டில் இருந்த வனரோஜா (43) என்பவர் ஓடிவந்தார். அவரையும் கத்தி முனையில் மிரட்டிய ஆசாமிகள், அவரிடம் இருந்து 2 தங்க மோதிரங்களை பறித்துக்கொண்டு, வீட்டின் பின்புறமாக சுவர் ஏறி குதித்து தப்பினர்.