கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே வாலிபர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுகிடந்தார். விசாரணையில் அவர் சென்னை எண்ணூரை சேர்ந்தவர் என்றும் அவர் மீது 23 வழக்குகள் உள்ளது என்றும் தெரிய வந்தது. கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம் ரயில்வே தண்டவாளம் அருகில் 3 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதனை ஒட்டியபடி காலி மைதானம் உள்ளது. இங்கு, சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கழுத்து அறுக்கப்பட்டு, பல்வேறு வெட்டு காயங்களுடன் கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்த, போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பின்னர் போலிசார் மதுபோதையில் யாரேனும் கொலை செய்தார்களா என்று விசாரித்து வந்தனர்.