புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஹார்வார்ட் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் ஆஷிஷ் ஜா மற்றும் ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி ஜோகன் ஜீசெக் ஆகியோருடன் சமூக வலைதளம் மூலமாக கலந்துரையாடினார். அப்போது சுகாதார நிபுணர் ஆஷிஷ் ஜா கூறுகையில், ‘‘கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி ஓரு ஆண்டுக்குள் கண்டுபிடிக்கப்பட்டு விடும். வைரஸ் பரிசோதனைகள் பெரியளவில் நடத்தப்பட வேண்டும். அப்போது தான் பொது முடக்கத்துக்கு பின் பொருளாதாரம் திறந்தாலும், மக்களிடையே நம்பிக்கை பிறக்கும். கொரோனா வைரஸ் 12-18 மாத பிரச்னையாகும். அதனால், உலகமானது 2021ம் ஆண்டுக்கு முன்னதாக கொரோனாவை விட்டு வெளியே வர முடியாது” என்றார்.