புதுடெல்லி: ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் கடந்த 3 வாரமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தொடர்பாக 5 மாநில அரசுகளுடன் மத்திய சுகாதார செயலாளர் அவசர ஆலோசனை நடத்தி உள்ளார். கொரோனா பாதிப்பால் நீட்டிக்கப்பட்ட 4ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டன. குறிப்பாக, மாநில அரசுகளின் பரஸ்பர சம்மதத்துடன் பொதுமக்கள் இடம் பெயர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது.இந்நிலையில், கடந்த 3 வாரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்த உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், மத்திய பிரதேச மாநில அரசுகளுடன் மத்திய சுகாதாரத் துறை நேற்று அவசர ஆலோசனை நடத்தியது. 5 மாநில அரசின் தலைமை செயலாளர்களுடன், மத்திய சுகாதார செயலர் ப்ரீத்தி சுடான் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசித்தார். அப்போது, மாநிலத்தின் இறப்பு விகிதம், பாதிப்பு இரட்டிப்பு விகிதம், பரிசோதனை அளவீடு, நோய் தொற்று உறுதிபடுத்தப்படுவோர் சதவீதம் குறித்து அந்த மாநில அரசுகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.