திருவள்ளூர் மாவட்டம் பெரும்பாக்கத்தில் ரூ.385.63 கோடி மதிப்பிலான புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

திருவள்ளூர் :திருவள்ளூரில் அமையவுள்ள  புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்மைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம், திருவள்ளூர் மாவட்டம் பெரும்பாக்கத்தில் ரூ.385.63 கோடியில் புதிதாக கட்டப்படவுள்ள அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

*மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, மருத்துவக்கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் படிப்படியாக அரசு மருத்துவக்கல்லூரிகளை ஏற்படுத்தி வருகிறது.

*அந்த வகையில், கடந்த 3 ஆண்டுகளில் புதுக்கோட்டை, கரூரில் அரசு மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்பட்டன.

*ஈரோடு மாவட்டம் பெருந் துறையில் செயல்பட்டு வந்த ஐ.ஆர்.டி. மருத்துவக் கல்லூரியானது 2019-2020-ம் கல்வி ஆண்டு முதல் அரசு மருத்துவக்கல்லூரியாக மாற்றப்பட்டு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.

*மேலும், மத்திய அரசின் நிதியுதவியுடன், கடந்த 2019-ம் ஆண்டில், ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், நீலகிரி, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 11 புதிய அரசு மருத்துவக்கல்லூரிகளை தொடங்க அ.தி.மு.க. அரசு மத்திய அரசின் ஒப்புதலை பெற்று சரித்திர சாதனையை படைத்துள்ளது.

* இந்த நிலையில்,சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம், திருவள்ளூர் மாவட்டம் பெரும்பாக்கத்தில் ரூ.385.63 கோடியில் புதிதாக கட்டப்படவுள்ள அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

* திருவள்ளூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் அருகில்  இந்த மருத்துவக் கல்லூரி அமைய உள்ளது.

*இந்த நிகழ்ச்சியில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் க.சண்முகம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: