பெங்களூரு: தமிழகத்தில் வரும் 2021ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் கர்நாடக முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முன்னாள் போலீஸ் அதிகாரி அண்ணாமலை. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு கர்நாடக மாநிலத்தில் ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றினார். சிக்கமகளூரு, குடகு உள்பட பல்வேறு மாவட்டங்களில் எஸ்.பியாக பணியாற்றிய அவர் இறுதியாக பெங்களூரு தென் மண்டல டி.சி.பி.யாக பணியாற்றினார். கர்நாடகாவில் நடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, இவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து சொந்த ஊருக்கு சென்ற அவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் தலைகாட்டி வந்தார்.