கார்த்தி சிதம்பரம் செலுத்திய 10 கோடி டெபாசிட்டை திருப்பி கொடுக்க உத்தரவு

புதுடெல்லி: முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வதற்காக செலுத்திய 10 கோடி பிணைத்தொகையை திருப்பி கொடுக்க  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் மீது ஐஎன்எக்ஸ் மீடியா, மேக்சிஸ் முறைகேடுகள் தொடர்பாக அமலாக்கத் துறையும், சிபிஐயும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன. அவர் வெளிநாடு தப்பி சென்று இடாமல் இருப்பதற்காக அமலாக்கத் துறை அவரது பாஸ்போர்ட்டை முடக்கியது. அவரது வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன.

இதனிடையே, கடந்த பிப்ரவரி 14 முதல் மார்ச் 1ம் தேதி வரையிலான காலக் கட்டத்தில் டென்னிஸ் போட்டிகளுக்காக இங்கிலாந்து, பிரான்ஸ் செல்வதற்கு கார்த்தி சிதம்பரத்துக்கு அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம், இதற்கான பிணை வைப்புத்தொகையாக 10 கோடியை நீதிமன்ற பதிவாளரிடம் செலுத்த உத்தரவிட்டது. அதன்படி, கார்த்தி அந்த பணத்தை செலுத்தி வெளிநாடு சென்றார்.

இந்நிலையில், இந்த தொகையை திருப்பி தரும்படி கோரி கார்த்தி சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை காணொலி காட்சி மூலம் விசாரித்த தலைமை நீதிபதி எஸ் ஏ பாப்டே தலைமையிலான அமர்வு, அவர் வெளிநாடு செல்ல அனுமதி அளித்ததுடன், ₹10 கோடியை திருப்பி கொடுக்கவும் பதிவாளருக்கு உத்தரவிட்டது.

Related Stories: