ஊரடங்கு அமலால் திருப்பதி கோயிலுக்கு ரூ.400 கோடி வருவாய் இழப்பு : ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்கக் கூட பணம் இல்லை என நிர்வாகம் தகவல்

ஹைதராபாத் : ஊரடங்கு அமலில் உள்ளதால் திருப்பதி கோயிலுக்கு ரூ.400 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஊழியர்களுக்கு ஊதியம் அளிப்பதற்கு கூட பணம் இல்லை என்று கோயில் நிர்வாகம் கூறியிருக்கிறது. தினசரி 80 ஆயிரம் பக்தர்கள் வந்து சென்றதால் உண்டியல் காணிக்கை, விடுதிக் கட்டணம் என பல வழிகளில் வருவாய் கிடைத்தது. ஆனால் கடந்த மார்ச் மாதம் இறுதியில் கோயில் நடை அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஊழியர்களுக்கு 50% மட்டுமே ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஊரடங்கால் திருப்பதி கோயிலுக்கு ரூ. 400 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுவிட்டதாக தேவஸ்தான தலைவர் வை.வி.சுப்பா ரெட்டி கூறியுள்ளார்.

 ஊதியம், ஓய்வூதியம் மற்றும் நிரந்தர செலவுக்காக ஆண்டுதோறும் ரூ.2,500 கோடி செலவிடப்படும் என்ற அவர், இவற்றிற்காக ஏற்கனவே ரூ. 300 கோடி செலவிடப்பட்டுவிட்டதாக தெரிவித்து இருக்கிறார். திருப்பதி கோயில் நிர்வாகம் 8 டன் தங்கத்தை கை இருப்பில் வைத்துள்ளது. இது தவிர பல்வேறு வங்கிகளில் ரூ.14,000 கோடி நிரந்தர வைப்புத் தொகையாக வைத்திருக்கிறது. ஆனால் இதில் கைவைக்காமல் செலவுகளை சமாளிக்க வேண்டும் என்பதே நிர்வாகத்தின் திட்டம் ஆகும்.

Related Stories: