ஜூலை மாதம் இந்தியாவில் கொரோனா உச்சத்தை எட்டும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

புதுடெல்லி: வரும் ஜூலை மாதம் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சக்கட்டத்தை எட்டும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்ட ஆரம்பித்துள்ளது. ஆனால், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் இந்த பாதிப்பு சற்று குறைவாகத்தான் உள்ளது. எனினும் இது நிரந்தரம் அல்ல என்றும் ஜூலையில் இதன் பாதிப்பு புதிய உச்சத்தில் இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் கொரோனா வைரஸ் சிறப்பு தூதர் டாக்டர் டேவிட் நபரோ கூறியதாவது: இந்தியாவில் கொரோனா வைரஸ் அடங்குவதற்கு முன் ஜூலையில் உச்சக்கட்டத்தை எட்டும். ஊரடங்கை நீக்கும்போது, அதிகமான பாதிப்புகள் இருக்கும்.

ஆனால். இதற்காக மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும், ஸ்திரத்தன்மை இருக்கும். இந்தியா அதன் விரைவான நடவடிக்கையின் காரணமாக, தொற்றுநோயை குறிப்பிட்ட பகுதிகளுக்கு கட்டுப்படுத்த முடிந்தது. இந்தியாவில் ஊரடங்கால் வைரசை சில குறிப்பிட்ட இடங்களில் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடிந்தது. எனினும், மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், டெல்லி மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றில் பாதிப்பு அதிகம் உள்ளது.

மக்கள்தொகை அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாட்டில், கொரோனா வைரசை கட்டுப்படுத்துவது மிகக்கடினமான விஷயம். தற்போது இந்தியாவில் பாதிப்பு இரட்டிப்பு விகிதம் 11 நாட்களாக உள்ளது. இதற்கு முன்பு இருந்த 9 நாட்களில் இருந்து இது மீண்டும் 11 ஆக உயர்ந்துள்ளது நல்ல விஷயம். இந்தியாவில் தற்ேபாது வயதானவர்களில் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.  அங்கு பல்வேறு தரப்பட்ட வயதினர் விகிதம் அதிகம் இருப்பதால், மொத்த இறப்புகள் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளன.

இந்தியாவில் தற்போது கோடைக்காலம் தொடங்கி உள்ளது நல்ல விஷயம். இதுபோன்ற வெப்பமான காலநிலையில், வைரஸ் மிக விரைவாக பரவாது. இது இந்தியாவுக்கு சாதகமாக விஷயம். இவ்வாறு டேவிட் நபரோ கூறினார்.

Related Stories: