உடன்குடி: ஊரடங்கு உத்தரவால் வாகன போக்குவரத்து முடங்கியதால் வெளியிடங்களுக்கு கொண்டு செல்ல முடியாமல் 25 டன் பூசணிக்காய்கள் அழுகி வருகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதிகளில் ஏராளமானோர் விவசாய பணியில் ஈடுபட்டுள்ளனர். வழக்கமாக இங்கிருந்து தர்ப்பூசணி, பூசணிக்காய், முருங்கை உள்ளிட்ட ஏராளமான விவசாய பொருட்கள் வெளியூர், வெளிமாவட்டங்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது.
உடன்குடி மெஞ்ஞானபுரம் பகுதியில் சுமார் 10 ஏக்கரில் பூசணிக்காய் நடவு செய்துள்ளனர். 85 நாட்களில் காய் விளைந்து விற்பனைக்கு தயாரானது. கடந்தாண்டு கிலோ ரூ.14க்கு விற்பனையானது. தற்போது கொரோனா தொற்று காரணமாக வாகனங்கள் சரிவர இயக்கப்படாமல் உள்ளது. இதனால் பூசணிக்காயை தேடுவாரில்லை. செடிகளில் இருந்து பறித்து குவித்து வைக்கப்பட்டுள்ளத பூசணிக்காயை வெளியூரில் இருந்து வியாபாரிகள் வாங்கிச் செல்ல வராததால் அவை அழுகி வருகிறது.