புதுடெல்லி: மத்திய சுகாதாரத் துறை கூடுதல் செயலாளர் லாவ் அகர்வால் நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: கொரோனா வைரஸ் பாதிப்புகளின் இரட்டிப்பு விகிதம் ஊரடங்கு அமலுக்கு பின்னர் 3.4 நாளில் இருந்து 9.1 நாளாக உயர்ந்தது. அது தற்போது 11 நாட்களாகி உள்ளது. இரட்டிப்பு விகிதம் டெல்லி, உத்தர பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் 11 முதல் 20 நாட்களிலும், கர்நாடகா, லடாக், அரியானா, உத்தரகாண்ட் மற்றும் கேரளாவில் 20 முதல் 40 நாட்களிலும் கணக்கிடப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 1,718 பேர் பாதிக்கப்பட்டுள்ளதன் மூலம், பாதிப்பு எண்ணிக்கை 33,050 ஆக உள்ளது. இறப்பு விகிதமும் தற்போது 3.2% ஆகு உள்ளது. இதில் ஆண்கள் 65%, பெண்கள் 35%. இவர்களில் வயது வாரியாக பார்க்கும் போது, 45 வயதுக்குட்பட்டவர்கள் 14%, 45 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் 34.8%, 60 வயதுக்கு மேற்பட்டோர் 51.2 சதவீதமும் இறந்துள்ளனர்.
‘இந்தியா உறுதியாக வெற்றி பெறும்’நிதி ஆயோக் ஏற்பாடு செய்திருந்த அரசு சாரா அமைப்புகள், பொதுசேவை அமைப்புகளுக்கான காணொலி கூட்டத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறுகையில், ``உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், கொரோனாவுக்கு எதிரான போரில், இந்தியா அனைத்து நிலைகளிலும் மிக சிறப்பாக செயல்பட்டு, முன்னோக்கி சென்றுள்ளது. இனிவரும் நாட்களில் இந்தப் போரில் இந்தியா உறுதியாக வெற்றி பெறும். மே மாதத்துக்குள் உள்நாட்டிலேயே தரமான ரேபிட் டெஸ்ட் கிட்ஸ் மற்றும் கொரோனா கண்டுபிடிப்பு கருவிகள் தயாரிக்கப்படும்’’ என்று கூறினார்.