பெருந்துறை: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதையடுத்து கடந்த ஒரு மாதமாக நகைக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று அட்சய திருதியை நாளாகும். அட்சய திருதியை தினத்தன்று தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்பதும், வாழ்வு வளம் பெறும் என்பதும் மக்களிடம் நம்பிக்கையாக உள்ளது. இதனால் இத்தினத்தன்று நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் தற்போது கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் பெருவாரியான நகைக்கடை உரிமையாளர்கள் அட்சய திருதியை முன்னிட்டு தங்கள் வாடிக்கையாளருக்கு போன் மூலம் தங்கம் தேவை இருக்கிறதா என நேற்று முன்தினமே கேட்டறிந்து பின்னர் அதனை அட்சய திருதியை நாளான நேற்று காலை நகை முன்பதிவு செய்தவரின் வீட்டருகே சென்று சாலையோரம் நின்று தங்கம் விற்பனையில் ஈடுபட்டனர்.