புதுடெல்லி: மத்திய ஊழல் கண்காணிப்பு தலைமை ஆணையராக சஞ்சய் கோத்தாரி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மத்திய ஊழல் கண்காணிப்பு தலைமை ஆணையராக பதவி வகித்த கே.வி.சவுத்ரியின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஜூனில் முடிவடைந்ததைத் தொடர்ந்து அப்பதவி காலியாக இருந்து வந்தது. புதிய தலைமை ஆணையரை நியமிக்க பிரதமர் மோடி தலைமையிலான உயர்நிலை தேர்வுக்குழு நடவடிக்கை எடுத்தது. இக்குழு, ஜனாதிபதியின் செயலாளராக பதவி வகித்த சஞ்சய் கோத்தாரியை கடந்த பிப்ரவரியில் பரிந்துரை செய்தது.
இதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். கடந்த 2017 ஜூலையில் ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்பட்டவர் கோத்தாரி. இந்நிலையில், அவர் புதிய மத்திய ஊழல் கண்காணிப்பு தலைமை ஆணையராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். ராஷ்டிரபதி பவனில் நடந்த இவ்விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.