மூணாறு: தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலியாக, தமிழகத்தை ஒட்டியுள்ள மூணாறு எல்லைப்பகுதியில் கேரள போலீசார், ட்ரோன் மூலம் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில், இந்த மாவட்டத்தை ஒட்டியுள்ள தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மூணாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பொதுமக்கள், தங்களுக்கு தேவையான காய்கறி, மளிகைச்சாமான்கள் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு, தேனி மாவட்டத்துக்கு அதிகமாக சென்று வருகின்றனர். மேலும், தேனியில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறும் 41 பேரில், 15 பேர் போடியைச் சேர்ந்தவர்கள்.மூணாறு எல்லைப்பகுதியான சின்னக்கானல், சந்தன்பாறை, உடும்பன்சோலை ஆகிய கிராம பஞ்சாயத்துகள், போடி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ளன. இந்நிலையில், தேனி மாவட்டத்தை ஒட்டியுள்ள மூணாறு எல்லைப்பகுதி பஞ்சாயத்துகளில் 22 வார்டுகளுக்கு இடுக்கி கலெக்டர் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.