நாகர்கோவில்: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் டெல்லியில் இருந்து திரும்பிய பின்னர் சென்னை வந்து அங்கிருந்து அரசு பஸ், ஆம்னி பஸ்களில் சொந்த ஊருக்கு வருகை தந்ததாக மாநகராட்சி சார்பில் ரூட் மேப் வெளியிடப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கான ரூட் மேப் சுகாதாரத்துறையால் தயார் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் கொரோனா தொற்று மற்றவர்களுக்கும் பகிரப்பட்டதா என்பது தொடர்பாக ஆய்வு நடந்து வருகிறது.
இதில் நாகர்கோவில் டென்னிசன் ரோடு பகுதியை சேர்ந்த 62 வயது நபர் 20ம் தேதி முதல் 23ம் தேதி வரை டெல்லி நிஜாமுதீனில் தங்கியுள்ளார். 23ம் தேதி அங்கிருந்து டெல்லி விமான நிலையத்திற்கு இரவு 8 மணிக்கு வந்துள்ளார். அங்கிருந்து விஸ்தாரா விமானத்தில் சென்னைக்கு 23ம் தேதி இரவு 8 மணிக்கு புறப்பட்டுள்ளார். 23ம் தேதி இரவு 11 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்துள்ளார். அங்கிருந்து ஆட்டோவில் சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு இரவு 11.15 மணிக்கு வந்து சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து எஸ்இடிசி பஸ்சில் மதுரைக்கு 24ம் தேதி இரவு 1 மணிக்கு வந்துள்ளார். 24ம் மாலை 6 மணிக்கு வடசேரி வந்த அவர் சொந்த வாகனத்தில் வீட்டிற்கு சென்றடைந்துள்ளார் என்று அவருக்கான ரூட் மேப் வெளியிடப்பட்டுள்ளது.