கொரோனா பிடியில் இருந்து நாட்டை மீட்க ரோபோக்களை இலவசமாக தருகிறோம்: தாமாக முன்வரும் திருச்சி ரோபோட்டிக் நிறுவனம்

திருச்சி: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரோபோக்களை இலவசமாக தருகிறோம் என தாமாக முன்வந்து திருச்சி ரோபோட்டிக் நிறுவனம் அறிவித்துள்ளது. சீனாவின் வூகானில் முதன்முறையாக பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 195க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை உண்டாக்கி வருகிறது. இத்தகைய வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை, இந்தியா முழுவதும் 26 பேர் உயிரிழந்த  நிலையில் 979  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை பொருத்தவரை 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பல்லாயிரம் பேர் வீட்டிலும், மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு மூலம் அது கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் நாளுக்கு நாள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும்  அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சிகிச்சை அளிப்பது மிகவும் சவாலான நிலைக்கு தள்ளப்படும் நிலை ஏற்படலாம். அதிலும், மருத்துவ மற்றும் தூய்மை பணியாளர்களே வெகுவாக சிரமம் மேற்கொள்ளலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணி நிவாரணமாக திருச்சியைச் சேர்ந்த தனியார் ரோபோட்டிக் நிறுவனம் ஒன்று தாமாக முன்வந்து தான் தயாரித்துள்ள ரோபோக்களை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

ட்ரோன், ரோபோ ஆகியவற்றை தயாரித்து வரும் புரபெல்லர் டெக்னாலஜிஸ் என்ற ரோபோட்டிக் நிறுவனம் ஜாபி மற்றும் ஜாபி மெடிக் என்ற இருவகையான ரோபோக்களை தயாரித்து வருகிறது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் சி.இ.ஓ முகமது ஆஷிக் ரகுமான் பேசியதாவது; மருத்துவ மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மாற்றகாக செயல்படக் கூடிய வகையில் ஜாபியும், அத்தியாவசிய பொருட்களை டெலிவரி செய்யக்கூடிய வகையில் ஜாபி மெடிக்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதில் ஜாபி, மருத்துவர்களுக்கு உதவியாகவும், நோயாளிகளுக்கு தேவையான மருந்து உணவு போன்றவற்றை வழங்க பயன்படுத்தலாம். இது மொபைல் மூலமாகவும், வாய்ஸ் இன்ட்ராக்டிவ் மூலமாகவும் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுளது என கூறினார். அதேபோல, ஜாபி மெடிக் ரோபோ ரோவர் வகையைச் சேர்ந்தவை.

இது 1 கி.மீ வரை சுமார் 20 கிலோ பொருட்களை கொண்டு செல்லும் திறனுடையது. இதன் மூலம் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும். மேலும், சேனிடைசர் தெளிக்கவும் பயன்படுத்தலாம். கையிருப்பாக ஜாபி ரகத்தில் 9 ரோபோக்களும், ஜாபி மெடிக் ரகத்தில் ஒன்றும் உள்ளது. அரசு அங்கீகரித்தால் இதனை இலவசமாக வழங்கத் தயாராக உள்ளோம். ஏற்கெனவே இந்த வகை ரோபாக்கள் சீனா மற்றும் ஜப்பானில் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் பயனடுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Stories: