திமுக மாஜி எம்எல்ஏ வீட்டில் குண்டு வீசிய 2 பேர் கைது: ரவுடி கோர்ட்டில் சரண்

மதுரை: மதுரை மாநகர் மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் வேலுச்சாமி (72). முன்னாள் எம்எல்ஏ. இவர், மதுரை அண்ணாநகரிலுள்ள வீட்டில் குடியிருந்து வருகிறார். கடந்த 16ம் தேதி பிற்பகல் 2.25 மணிக்கு இவரது வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்டது. இதுகுறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிந்து சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து ஆய்வு செய்தபோது, மதுரை கீரைத்துறை பகுதியைச் சேர்ந்த மலைச்சாமி (43), அவரது உறவினர் ஜெயராம் (36) மற்றும் ஒருவர் எனத்தெரிந்தது. மலைச்சாமி, ஜெயராம் ஆகியோரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். விசாரணை குறித்து போலீசார் கூறும்போது, ‘‘15 ஆண்டுகளுக்கு முன்பு வேலுச்சாமி மகனை கொலை செய்த வழக்கில் மலைச்சாமி என்பவரை போலீசார் கைது செய்தனர். சிறையில் இருந்து வெளிவந்த அவர் பழிக்குப்பழி வாங்குவதற்காகவே குண்டு வீசி கொலை செய்ய திட்டமிட்டு, இதில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது’’ என்றனர். இதில் தொடர்புடைய ரவுடி சையது யாசின் முகமது அலி, நேற்று மதுரை மாவட்ட கோர்ட்டில் சரணடைந்தார்.

Related Stories: