2 ஆண்டுகளில் 121 பேரை தூக்கில் போட தீர்ப்பு : பாலியல் வழக்குகளில் நீதிமன்றங்கள் அதிரடி; போக்சோ சட்டத்தால் தூக்கு தண்டனை அதிகரிப்பு

டெல்லி : பாலியல் கொலை வழக்குகளில் தான் இந்திய நீதிமன்றங்கள் அதிகளவில் தூக்கு தண்டனை விதிப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் நாடு முழுவதும் 264 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.அதில் 121 பேர் மீது பாலியல் குற்றவாளிகள் ஆவர். அரிதும் அரிதான வழக்குகளில் மட்டுமே தூக்கு தண்டனை என்பது நடைமுறை. ஆனால் அண்மைக்காலமாக விசாரணை நீதிமன்றங்கள் விதிக்கும் தூக்கு தண்டனைகளில் பாலியல் குற்றங்கள் தொடர்பான கொலை வழக்குகளிலேயே அதிகம் பேர் தூக்கு தண்டனைக்கு ஆளாகுவது தெரியவந்துள்ளது.

2018ம் ஆண்டு நாடு முழுவதும் 162 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. இது கடந்த 20 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2 மடங்கு அதிகமாகும். தூக்கு தண்டனைக்கு ஆளானவர்களில் 67 பேர் பாலியல் கொலை வழக்கு குற்றவாளிகள். 2019ம் ஆண்டு 102 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களில் 54 பேர் பாலியல் கொலை வழக்கு குற்றவாளிகள்.கடந்த ஆண்டு பாலியல் வழக்கில் தூக்கு தண்டனை பெற்றவர்களால் பாதிக்கப்பட்டவர்களில் 40% பேர் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள். இதற்கு போக்ஸோ சட்டமே காரணம் என்கின்றனர் வழக்கறிஞர்கள்.

குழந்தைகளை பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுக்காக்க வகை செய்யும் போக்ஸோ சட்டம், 2012ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. 2019ம் ஆண்டு இச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு தூக்கு கண்டனைக்கு வகை செய்யப்பட்டது. இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் 16 பேர் மட்டுமே தூக்கில் போடப்பட்டு இருந்தாலும் அவர்களில் தனஞ்செய் சட்டர்ஜி என்பவன் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றச்சாட்டிற்கு ஆளானான்.1990ம் ஆண்டு நடைபெற்ற இக்கொடிய செயலுக்காக 2004ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி கொல்கத்தா மத்திய சிறையில் அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. நிர்பயா பாலியல் வழக்கிலும் பவன் குப்தா உள்ளிட்ட 4 பேர் வருகிற 20ம் தேதி தூக்கில் போடப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: