தாக்குதலுக்கு கடும் கண்டனம் ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க கோரிக்கை

 

புதுடெல்லி: ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியனுடன் பேசிய பிரதமர் மோடி ஈரானில் முக்கிய கட்டமைப்புகள் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அதேநேரத்தில் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க கோரிக்கை விடுத்தார்.
மேற்கு ஆசியாவில் போர் நீடிக்கும் நிலையில், பிரதமர் மோடி நேற்று ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது பிரதமர் மோடி, ஈத் மற்றும் நவ்ரூஸ் புத்தாண்டு பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த பண்டிக்கைக் காலம் மேற்கு ஆசியாவிற்கு அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை கொண்டு வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாகவும், உலகளாவிய விநியோக சங்கிலிகளைச் சீர்குலைப்பதாகவும் அமைந்துள்ள தாக்குதலால் ஈரானின் முக்கிய உட்கட்டமைப்புகள் சேதப்படுத்தப்படுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

அதோடு, கடல் வழி பயணச் சுதந்திரத்தை பாதுகாப்பதும், கப்பல் போக்குவரத்துப் பாதைகள் தொடர்ந்து திறந்த நிலையிலும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்வதும் எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்திய பிரதமர் மோடி ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வலியுறுத்தினார். ஈரானில் வசிக்கும் இந்திய மக்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதில் ஈரான் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவக்கும் பிரதமர் மோடி பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார். கடந்த பிப்ரவரி 28ம் தேதி போர் தொடங்கியதில் இருந்து 2வது முறையாக பிரதமர் மோடி ஈரான் அதிபர் மசூத்துடன் தொலைபேசியில் பேசி உள்ளார். இதற்கு முன் கடந்த 12ம் தேதி உரையாற்றினார். மேலும், சவுதி அரேபியா, குவைத், ஜோர்டான், பிரான்ஸ், மலேசியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடனும் பிரதமர் மோடி தொடர்ந்து பேசி வருகிறார்.

 

Related Stories: