மரக்காணம்: மரக்காணம் பேரூராட்சிக்குட்பட்ட 9வது வார்டில் உள்ளது சால்ட் ரோடு. இப்பகுதியில் அதிகளவில் இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில்தான் இஸ்லாமியர்கள் தினமும் தொழுகை செய்யும் ஜாமியா பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளி வாசலுக்கு தொழுகை செய்ய மரக்காணம் பகுதி இஸ்லாமியர்கள் மட்டும் அல்லாமல் வெளியிடங்களில் இருந்தும் வெள்ளிக்கிழமை மற்றும் சிறப்பு நாட்களில் திரளான இஸ்லாமியர்கள் வருகின்றனர். இதனால் இந்த பள்ளிவாசலுக்கு செல்லும் வகையில் மரக்காணம், சென்னை மற்றும் சால்ட் ரோடு, மார்க் கெட் ஆகிய நான்கு முனை இணைப்பு சாலையில் ஜாமியா பள்ளிவாசல் செல்லும் வழியை குறிக்கும் வகையில் இஸ்லாமியர்கள் சார்பில் கடந்த 5 ஆண்டுக்கு முன் பெயர் பலகை வைக்கப்பட்டது.
இந்த பெயர் பலகை வைத்துள்ள இடத்தில்தான் மரக்காணம் காவல் துறை சார்பில் இப்பகுதியில் தினமும் நடை பெறும் வழிப்பறி கொள்ளை, சாலை விபத்துகள், மர்ம நபர்களால் திருடப்படும் மோட்டார் பைக் கொள்ளை உள்ளிட்ட குற்றச் செயல்களை கண்டுபிடித்து உடனடியாக திருடர்களையும், சமூக விரோதிகளையும் கைது செய்யும் வகையில் நான்கு திசைகளிலும் தெளிவாக தெரியும்படி சி.சி.டி.வி கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இந்த கேமராவை போலீசார் தரப்பில் பொருத்தப்பட்ட நாளில் இருந்து பொதுமக்களும் ஓரளவு நிம்மதியாக உள்ளனர்.
இந்நிலையில் இந்த சி.சி.டிவி கேமரா பொருத்தப்பட்ட இடத்தின் கீழ் இருந்த பெயர் பலகையைதான் நேற்று இரவு யாரோ மர்ம நபர்கள் கருப்பு மை பூசி அவமதித்துள்ளனர். இதனை பார்த்த இப்பகுதி இஸ்லாமியர்கள் நாங்கள் வைத்துள்ள பெயர் பலகையை யாரோ மர்ம நபர்கள் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் கருப்பு மையால் பூசி அவமரியாதை செய்துள்ளனர். எனவே எங்கள் பள்ளிவாசலுக்கு செல்வதற்காக வழிகாட்டும் வகையில் வைத்த பெயர் பலகையை அவமரியாதை செய்த மர்ம நபர்களை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் வழக்குப்பதிந்து பெயர் பலகையில் கருப்பு மை பூசியது யார்? என்று அங்குள்ள சி.சி.டி.வி கேமராவை துல்லியமாக ஆய்வு செய்து வருகின்றனர்.