டெல்லி: எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கூச்சல், குழப்பம் காரணமாக நாடாளுமன்ற மக்களவை தொடர்ந்து, 5வது நாளாக முடங்கி இருக்கிறது. இதற்கிடையே 7 காங்கிரஸ் எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகம் முன்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் எம்.பிக்கள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியேயும், நாடாளுமன்றத்திற்குள்ளேயும், எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள். 7 எம்.பிக்களின் சஸ்பெண்டை எதிர்த்து மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதன் காரணமாக மக்களவை இன்று 5வது நாளாக ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. கடந்த திங்கட்கிழமையிலிருந்து நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. கடந்த 23ம் தேதிலியிலிருந்து தலைநகர் டெல்லியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் இடதுசாரி கட்சிகள் மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் மக்களவையின் அவை நடவடிக்கைகளை ஒத்தி வைத்துவிட்டு இது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் கொடுத்திருந்தார்கள். ஆனால் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.