கோவை: கோவை போத்தனூர் கடைவீதியை சேர்ந்தவர் ஆனந்த் (33). இந்து முன்னணி மாவட்ட செயலாளர். இவர், நேற்று முன்தினம் இரவு காந்திபுரத்தில் இந்து அமைப்புகள் சார்பில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவான காத்திருப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். பின்னர் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இரவு 9 மணியளவில் நஞ்சுண்டாபுரம் நொய்யல் பாலம் அருகே பின்னால் பைக்கில் வந்த 2 பேர் இரும்பு கம்பியால் ஆனந்த் தலையில் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பினர். இதில், படுகாயம் அடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தலையில் 15 தையல் போடப்பட்டது.